Friday, April 28, 2023

அருள்மிகு பிடாரி இரணியம்மன் கோயில்.

திருவானைக்கா எல்லை காவல் தெய்வம் இரணியம்மன். ஆனைக்கா கோயிலின் தென்கிழக்குப் பகுதியில், திருநீற்றான் மதிலுக்கு வெளியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சிறிய கோயில். எனினும் மிகவும் அழகான, அமைதியான கோயில். 

வாசலில் குபேர கணபதி.

அதைத் தாண்டியதும் உடைந்த மதில். அதற்கு அருகில் பாதை போட்டுள்ளனர்.


பலிபீடம் உள்ளது; அதற்கு அடுத்து நுழைவாயில். 


வலம் வரும்போது மணல் வெளியில் சப்பாணி கருப்பர், சங்கிலி ஆண்டவர், காத்தவராயர், தங்கையாள், மதுரைவீரன் ஆகியோர் உள்ளனர். அய்யனாரின் குதிரை வாகனம் உள்ளது. அதற்கு எதிரில், சற்றுத் தள்ளி ஐயனார் சந்நிதி (வலம் வரும்போது பார்ப்போம்).


தொடர்ந்து நடக்கையில் கோயிலுக்குரிய கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. கோயிலின் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இக்கிணற்றில் விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகையில், இரணியம்மன் கருவறையின் பின்புறம் வருகிறது. சற்று முன்னே செல்ல, கணபதி சந்நிதி. 



தொடர்ந்து மணல் வெளியில் நடக்க ஐயனார் சந்நிதி (முன்பே அறிமுகமானது). அதற்கு அடுத்து, தலமரமாக தற்போது இருக்கும் மருத மரம். ஆலமரமும் முன்பு இருந்தது; தற்போது இல்லை என்று அர்ச்சகர் தெரிவித்தார். மருதமரத்தின் அடியில் விநாயகர், நாகர், கிராம தேவதைகளின் சிலாரூபங்கள் (பழுதானவை) உள்ளன. இதற்கு அடுத்து பேச்சியம்மன் சந்நிதி உள்ளது.




இப்போது மூல தெய்வம் இரணியம்மன் சந்நிதி இருக்கும் மண்டபம் நோக்கிச் செல்கிறோம். நுழையும் போதே தேவியின் சிம்மம் நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்கிறோம்.

இரணியாசுரனை சம்ஹரிக்கும் கோலத்தில் அம்பாள் பெரிய வடிவோடு இருந்தாலும் பக்தர்களை இன்முகத்தோடு, முகத்தில் குறுநகை ததும்ப காட்சி அளிக்கிறாள்.

தரிசித்த பின், நமஸ்கரித்து விட்டு, மன நிறைவோடு திரும்புகிறோம்.


Friday, January 24, 2020

Satsangam - Thai Amavaasai post

வணக்கம்.

இன்று (24-01-2020), வெள்ளிக்கிழமை, தை அமாவாசை இரண்டும் சேர்ந்த புனித நாள்.

அரசன் ஒருவன், "இன்று என்ன நாள்?" என்றான், அம்பிகையை தியானித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர், "இன்று பௌர்ணமி" என்று சொன்னார். கோபம் கொண்ட அரசன், "இன்று மாலை, நிலவு வருமா?" என்றான் அரசன். அம்பிகையின் பூரண சந்திர வதனத்தை, மனக்கண்ணில் கண்டு வந்த பட்டரோ, "அதற்கு என்ன? நிலவு வரும்." என்றார். ஒருவேளை நிலவு வரவில்லை எனில், தண்டனைக்கு உரியவனாவாய் என்றான் அரசன்.

மாலை வேளை வந்தது. வானில் நிலவு வரவில்லை. அபிராமி பட்டருக்கு, எல்லாமே அம்பிகை தான். அவர் வாயில் இருந்து வந்த வாக்கும், அந்த வாக்தேவியின் வாக்கே என்று நம்பிக்கை கொண்டிருந்தார். அன்னை அபிராமியை வணங்கி, பாடல்களைப் பாடத் தொடங்கினார். அப்பாடல்களே அபிராமி அந்தாதி. 79 ஆவது பாடலைப் பாடினார்.

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

இப்பாடலின் பொருள்:

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. அப்படி இருக்க, பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனித் தொடர்பு வேண்டுமா? வேண்டவே வேண்டாம்.

இப்பாடலைப் பாடியதும், அன்னை, தன் அணிகலன் ஒன்றைக் கழற்றி, வானில் வீச, முழு நிலவாய், மாலை வானில் மிளிர்ந்தது. அரசன் முதலிய அனைவரும் அதிசயித்தனர். பட்டரின் விழியும் மனமும் குளிர்ந்தது.

ஸத்ஸங்கம் (நல்லாரோடு கூடுதல், சேர்தல்) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் பாடலாக எனக்குத் தோன்றுகிறது. ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் ஸ்தோத்திரத்தில்,

ஸத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்
நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி:

என்கிறார்.

ஸத்சங்கத்தில் இருந்தால் பற்றை விடலாம். பற்றை விட்டால் அழிவு வராது. அழிவு இல்லை எனில், அறிவு வரும். அறிவு வந்தால், முக்தி பெறலாம்.

திவ்ய ப்ரபந்தம் - முதல் திருவந்தாதி, பொய்கை ஆழ்வார் எழுதியதில், பத்தாம் திருமொழி, ஐந்தாம் பாடலில்,

நா வாயில் உண்டே நமோநாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகை உண்டே, என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்.

நம் வாயில், நாக்கு உள்ளது. அதனால் "நமோ நாரணா" என்று பகவன் நாமத்தை, மந்திரத்தைச் சொல்லக்கூடிய திறம் உண்டு. மாறுதல் (அழிவு) இல்லாத நல்ல வழிக்குச் செல்லும் வழியும் உண்டு. அப்படி இருக்க, தீய வழியில் எதற்காக ஒருவர் செல்ல வேண்டும்? அப்படி விழும் அவர்கள் திறமைத்தான் என்னே!

என்று பாடுகிறார்.

ஆண்டாள் நாச்சியாரும், திருப்பாவைப் பாடல்களில், கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்று கூடாரை வெல்லும் சீர் பாடலில் பாடுகிறார். சங்கத் தமிழ் மாலை என்றே சொல்கிறாள். சங்கம் என்றால் கூட்டம். எல்லோரும் சேர்ந்து, இறைவனை வழிபட்டு, பெற்ற பேற்றினைப் பற்றிப் பாடுகிறாள். பகவத் கைங்கர்யம் என்பதே அந்தப் பேறு.

எல்லாரும் ஒன்று சேர்ந்து, நல் வழியில் செல்ல வேண்டும் என்று தான் நம் பெரியோர்கள், முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது வாக்கைப் புரிந்து கொண்டு, நல்ல வழியில் நாமும் சேர்ந்து செல்வோம்.

ஸத்சங்கம் எல்லாருக்கும் கிட்ட, இறைவன் அருள் வேண்டி,
சரண்யா

Monday, May 20, 2019

Sri Krishna Kathaamrutham

Sri Krishna Kathaamrutham by - Smt. Yogita Nagarajan - Pravachana Natyam performed on 18-May-2019, 6.30 PM to 8.30 PM at Sri Saraswathi Gana Sabha, Kumbakonam. An excellent programme. New of its kind. Bharathanatyam blended with Hari Katha. Keeping Sree Oothukkadu Venkata Kavi's compositions on Lord Krishna as the core, it was a memorable evening. Enchanting vocal by Ms. Arya Nagarajan (younger daughter of Yogita) - deep and sweet voice gave a strong foundation to the programme. Nattuvangam by Ms. Prasiddha Nagarajan (elder daughter of Yogita) maintained the tempo of the programme. Sri Satish Kumar (Arya, Prasiddha's guru) on the violin and Sri Venkatasubramaniam on the Mridangam provided able support to swara - laya of the programme. Smt Yogita, demonstrated each and every song sung by means of Abhinayam and brief talk. Her effort needs special appreciation. Everything was perfect and clear. Audiences were kept spell bound and were quite eager to know what is next after the conclusion of each song. Here are the YouTube links of the full programme. Please do watch and share the same with your friends. Don't miss to watch. Part 1/3:
https://www.youtube.com/watch?v=THegTiAtxKQ Part 2/3: https://www.youtube.com/watch?v=mphTR8LjHlI Part 3/3: https://www.youtube.com/watch?v=qd7L1sPU2WI

Thursday, February 14, 2019

ஆழ்வார்கள் நால்வரின் பாடல்களில் உள்ள ஒற்றுமை

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் முதல் ஆழ்வார்கள் மூவர் என அழைக்கப்படுவார்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமழிசை ஆழ்வார் அவர்களும் இம்மூவர் காலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் உள்ள திருவெக்கா என்னும் தலத்தில் அவதரித்தவர்.
பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை என்னும் மகாபலிபுரத்தில் அவதரித்தவர்.
பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தவர்.

இம்மூவரும் திருக்கோவலூர் என்னும் தலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ஒவ்வொருவரும் திருமால் மேல் நூறு பாடல்கள் (அந்தாதியாக) பாடினார்கள். முறையே முதல் (1), இரண்டாம்(2) மற்றும் மூன்றாம் (3) திருவந்தாதி என அழைக்கப்படும்.

திருமழிசை ஆழ்வார், சென்னை - திருவள்ளூர் இடையே அமைந்திருக்கும் தலமான திருமழிசை என்னும் ஊரில் அதே காலகட்டத்தில் அவதரித்தவர். திருச்சந்த விருத்தம் என்னும் 120 பாடல்களையும், நான்முகன் திரு அந்தாதி என்று 96 பாடல்களையும் பாடியுள்ளார். நான்முகனை என்று அந்த தொகுப்பு தொடங்குவதால், நான்முகன் திருவந்தாதி என்று கூறப்படுகிறது. நாலாம் (4) திருவந்தாதி என்றும் கூறுகிறார்கள்.

முதல் ஆழ்வார்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். ஆனால் திருமழிசை பிரான், இவர்களைச் சந்தித்தாரா என்பது தெரியவில்லை.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியில், பத்தாம் திருமொழியில் உள்ள ஒன்பதாவது பாடலின் (1.9.9) முதல் இரண்டு வரிகளும், பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில், நான்காம் திருமொழியில் உள்ள பத்தாவது பாடலின் (3.4.10) முதல் இரண்டு வரிகளும் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில், ஒன்பதாம் திருமொழியின் ஆறாம் பாடலின் (4.9.6) முதல் இரண்டு வரிகளும் ஒரே வரிகளாக உள்ளன. முறையே கீழே பார்ப்போம்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி - 10 ஆம் திருமொழி - பாடல் 9

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளனென்று ஓர்

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - 4 ஆம் திருமொழி - பாடல் 10

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்ணொடுங்கத் தானளந்த மன்

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - 9 ஆம் திருமொழி - பாடல் 6

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்(கு)
என்னொப்பார்க்(கு) ஈசன் இமை

இது போல, பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி, இரண்டாம் திருமொழி, முதல் பாடலின் (2.2.1) எல்லா வரிகளும், திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி, ஆறாம் திருமொழி, ஐந்தாம் பாடலின் (4.6.5) எல்லா வரிகளும் ஒத்துப் போகின்றன.

கடைநின்(று) அமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் - புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அவர்

பெரியோர்களின் மனம் ஒன்றையே நினைக்கிறது. அந்த ஒன்றையே பாடுகிறது. அது சில சமயங்களில், அவர்கள் வாக்கு மூலமாக தெளிவாக நமக்குத் தெரிய வருகிறது. ஒருவரையொருவர் சந்தித்தாலும், சந்திக்காமலும் எப்படி ஒரே வரிகளை இவர்கள் பாடியுள்ளார்கள்? இறைவனின் கிருபை என்று சொல்வதை விட வேறென்ன!

Great Minds think alike!

Friday, July 06, 2018

கொட்டாப்புளி (kottAppuLi)

நாம் பொதுவாக, குழந்தைகள் தூங்காமல் வெகு நேரம் விழித்திருந்தால் சொல்லும் ஒரு பதம் - அடக் கொட்டாப்புளி!

கொட்டாப்புளி என்பது தச்சர்கள் பயன்படுத்தும் ஒரு வகையான சுத்தியல். மரத்தால் ஆனது. ஆனால் மிருதுவான குழந்தைகளுக்கு எப்படி இப்படி ஒரு பெயர் வந்தது? கண்ணெறி பட்டுவிடுமோ என்று அவ்வாறு கூறுகிறார்களா? எனக்கு அதில் திருப்தி இல்லை.

எங்கிருந்து இந்தக் கொட்டாப்புளி என்ற வார்த்தை வந்தது என்று எனக்குப் பல நாட்களாக ஒரு கேள்வி.

சமீப காலமாக திவ்ய பிரபந்தம் படித்து வருகிறேன். அதனால் அதற்குச் சம்பந்தப் பட்ட கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம் எழுந்தது.

நம்மாழ்வார் பற்றிப் படிக்கையில், பிறந்ததிலிருந்தே கண்களைத் திறக்காது, அழவும் அழாது கிடந்த குழந்தையான நம்மாழ்வாரை, அவரது பெற்றோர்கள், ஆழ்வார் திருநகரி கோயிலில் உள்ள ஒரு புளிய மரத்தின் கீழ் விட்டுவிட்டனர்.

பெருமாள் சந்நிதியில் இருந்தால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் நெருங்காது, குழந்தையும் சரியாகி விடுவார் என்ற நம்பிக்கையில் ஆதிநாதனிடம் சமர்ப்பித்தனர். ஆனால், குழந்தை, பிறந்ததிலிருந்து பகவத் தியானத்தில் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. 16 ஆண்டுகள் கழித்தே கண்ணைத் திறந்தார். அது பெரிய கதை.

இப்போது புளிய மரத்திற்கு வருவோம். அந்தப் புளியமரம், ஒரு நாளும் தூங்குவது இல்லை. அதாவது, அதன் இலைகள் எப்போதும் விரிந்த நிலையிலேயே இருக்கும். இம்மரத்தில், பூக்கள் பூக்கும், அவை காயாகும். ஆனால் பழமாக அவை மாறாது.

உறங்காப் புளி என்று இந்த மரத்தைக் கூறுவார்கள். 5100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

ஆதிசேஷன் (இலக்குவணன்) இம்மரமாக, துர்வாச முனிவரின் சாபத்தால் ஆனார் என்றும், இராமபிரானே, நம்மாழ்வாராய் அங்கே அவதரித்தார் என்றும் கூறுவார்கள்.

உறங்குதல் என்றால் கண் கொட்டல் என்று சொல்வதுண்டு. கண் கொட்டாப் புளி = உறங்காப் புளி.

இதுவே நாளடைவில் கொட்டாப்புளி ஆகிவிட்டது என்று எண்ணுகிறேன்.

அதனால் குழந்தைகளை கொட்டாப்புளி என்று சொன்னால், இனி இந்தப் புளிய மரமும், நம்மாழ்வாரும் நினைவுக்கு வர வேண்டும்.

பி.கு. - இது முற்றிலும் என் சொந்தக் கருத்தே. நம் முன்னோர்கள், இறைவன் சம்பந்தப் பட்ட விஷயங்களைக் குழந்தைகளோடு சேர்ப்பது வழக்கம் என்னும் நம்பிக்கையில் எழுதினேன்.

English Translation:

We (in Tamil Nadu) use to call the children who stays awake for long time as kottAppuLi. I was in search of the reason behind using this word 'kottAppuLi'. KottAppuLi is a hammer made out of wood, used by carpenters. How come tender child are called with this rigid name? Some says to overcome the ill omens (kaN dhrishti) casted by people, they say like this. But I was not satisfied with that answer.

Recently I read a short version of Sri NammAzhwAr's life. It gave me the answer.

NammAzhwAr was born in a place called kurugoor (AzhwAr thiru nagari) near Tirunelveli. From the second he was born, he neither cried nor did he opened his eyes. His parents were so worried and they left him under a tamarind tree (puLiya maram) in the Adhi nadha perumaL temple in kurugoor. They believed that, the Lord will take care of the child and all his problems will be solved. They seldom knew that the child was constantly thinking of the Lord from the moment it was born. After 16 years only NammAzhwAr opened his eyes. Thats a big story.

Let us come to this tamarind tree in the temple.

The history says that Lakshmana prevented Sage Durvasa from meeting Rama when Lord Yama was talking with Lord Rama. So, getting angry with Lakshmana, the sage cursed him to become a tamarind tree. It is said that Lord Rama himself was born as NammAzhwAr and resided under the tamarind tree.

This tree is more than 5110 years old. The speciality of this tree is, it will never sleep. That is, its leaves will always be open. It's leaves won't shrink during sun set as other trees' leaves will do. So it is called as uRangAppuLi or the tamarind tree that will never sleep. One can see flowers blooming in this tree. Raw Tamarind being borne from the flowers. But one cannot spot a single tamarind fruit in this tree.

In Tamil, for sleep, we have another word viz. kaN kottal. So, the tamarind tree without sleep can also be called as kaN kottAp puLi. From this kottAppuLi word should have come.

So if we call a child as kottAppuLi hereafter, we should immediately think of nammAzhwAr and the sacred tamarind tree at AZhwar thiru nagari.

Please note that this is just my view. I have a belief that the words of our ancestors will definitely have some connection with the almighty. So I wrote.